பள்ளிக்கல்வித் துறையில், 10 இயக்குனரகங்கள் உள்ளன. இதில், தேர்வுத்துறையில், முதன்முறையாக ஊழியர் மற்றும் அதிகாரிகளுக்கு, 'பயோ மெட்ரிக்' திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இதனால், பணிமுடியும் முன், 'எஸ்கேப்' ஆகும் ஊழியர் எண்ணிக்கை குறைந்து, அலுவலக பணி நேரம் அதிகரித்து உள்ளது. தமிழக அரசு அலுவலகங்களில், பணியாளர்கள் தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப அலுவலகம் வந்து விட்டு, வராத நாட்களுக்கும் கையெழுத்து போட்டு, மோசடி நடப்பதாக புகார் எழுந்தது.
எனவே, அரசுத் துறை அலுவலகங்களில், 'பயோ மெட்ரிக்' என்ற விரல் ரேகை பதிவு முறை அறிமுகப்படுத்த உத்தரவிட்டது. அந்த வகையில், தேர்வுத் துறை இயக்குனர் தேவராஜன், இத்திட்டத்தை ஒரு மாதத்திற்கு முன் அதிரடியாக அமல்படுத்தினார்.
இதனால், ஊழியர்களின் வருகை மற்றும் அலுவலகபணி அளவில், பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதை, அதிகாரிகள் கண்டறிந்து உள்ளனர். 'பயோ மெட்ரிக்' திட்டப்படி, தாமதமாக பதிவு செய்தாலோ, 'ஆப்சென்ட்' ஆனாலோ, விதிப்படி அவர்களுக்கு ஊதியப்பிடித்தம் செய்யவும், விடுப்பாகக் கணக்கிடவும் உத்தரவிடப்பட்டு உள்ளது. அதனால், தேர்வுத் துறை ஊழியர்கள் கிலியில் உள்ளனர். சரியான நேரத்துக்கு வருவதுடன், மாலையில் குறிப்பிட்ட நேரம் வரை இருந்து, பணியாற்றிச் செல்வதால், தேக்கமடையும் பைல்களின் எண்ணிக்கை, பெருமளவு குறைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
No comments:
Post a Comment