கண்ணீரில் கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Saturday, May 2, 2015

கண்ணீரில் கம்ப்யூட்டர் ஆசிரியர்கள்

கடந்த 2013ம் ஆண்டு அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரிந்த 652 கணினி ஆசிரியர்கள் சுப்ரீம் கோர்ட் உத்தரவால் பணிநீக்கம் செய்யப்பட்டனர். அவர்களில் சிலர் தங்களின் வாழ்வாதாரத்திற்காக மறுபடியும் பணி வழங்கி கருணைகாட்ட வேண்டும் என்கிற கோரிக்கையோடு நீதிமன்றத்தை நாடியிருக்கிறார்கள். மதுரை  ஐகோர்ட் கிளையில் வழக்கு போட்டிருக்கும் பழனியப்பன், இந்தப் பிரச்னை பற்றி விரிவாகப் பேசினார்.

‘‘கடந்த 1999ம் வருஷம் அரசு ேமல்நிலைப் பள்ளிகளில் கணினி ஆசிரியர்களை எல்காட் நிறுவனம் வழியாக நியமித்தார்கள். ஐந்து ஆண்டு ஒப்பந்தம். இதில்  பி.எஸ்சி., பி.சி.ஏ., எம்.சி.ஏ., பி.இ., பி.ஜி.டி.சி.ஏ., படித்தவர்கள் பணியமர்த்தப்பட்டார்கள்.  2004ல் இந்த ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டது. எங்களின் போராட்டத்துக்குப்  பிறகு, 2006ல் தமிழக அரசு ஒரு சிறப்புத் தேர்வு மூலமாக எங்களை நிரந்தரமாக பணியமர்த்துவதாக சொன்னது.அப்போது கணினியில் பி.எட்., முடித்த பட்டதாரி  ஆசிரியர்கள் சிலர் கோர்ட்டுக்குப் போய், பி.எட் முடிக்காதவர்களை பள்ளிகளில் பணியமர்த்தக் கூடாது’ என்று வாதிட்டார்கள். எங்கள் நிலையைப் புரிந்து  கொண்ட ஐகோர்ட் சிறப்புத் தேர்வு  நடத்த உத்தரவிட்டது. 1880 இடங்களுக்கு 1713 பேர் தேர்வு எழுதினோம்.

      எல்லோருக்கும் வேலை கிடைக்கும் என்று எண்ணியிருந்தோம். ஆனால் மறுபடியும் கணினி பி.எட்., ஆசிரியர்கள் ‘50 சதவீதம் மார்க் என்பது தகுதி’ என  விதியில் இருப்பதாக சுட்டிக் காட்டி  நீதிமன்றத்திற்குப் போனார்கள். இதனால் 894 பேர் தேர்வானோம். மீதி 792 பேரை மறு தேர்வு மூலமாக தேர்ந்தெடுக்கலாம்  என்று கோர்ட் உத்தரவு போட்டது.டி.ஆர்.பி மூலமாக 2010ல் தேர்வு நடத்தப்பட்டது. ஆனால், இதில் 45 கேள்விகள் தவறாகக் கேட்கப்பட்டன. நாங்கள் மறுபடியும்  ஐகோர்ட்டை அணுகினோம்.

          நீதிமன்றம் ஐஐடி பேராசிரியர்களிடம் கருத்து கேட்டது. ‘18 கேள்விகள் சரி. 20 கேள்விகள் தவறு என்றும் 7 கேள்விக்கு கருத்து கூற விரும்பவில்லை’ எனவும்  பேராசிரியர்கள் சொல்லிவிட்டார்கள். நியாயப்படி இந்த 20 கேள்விகளுக்கு மார்க் கொடுத்திருக்க வேண்டும்.ஆனால், 20 கேள்விகளை எடுத்துவிட்டு 130க்கு  தேர்வை கணக்கிட்டு மார்க் போடச் சொல்லி கோர்ட் உத்தரவிட்டது. இதில் 120 பேர் தேர்வானார்கள்.ஆனால் 150க்கு என கணக்கிட்டபோது பாஸான 20 பேர்  130க்கு கணக்கிட்டபோது பெயிலானார்கள். இதனால், பெயிலானவர்கள் மொத்தமாக கோர்ட் படியேறினார்கள். இதற்கு கோர்ட், முதல் தேர்வு பட்டியலில் மாற்றம்  தேவையில்லை என்று சொன்னது. அந்தக் கணக்கின்படி பார்த்தால் 130க்கு நாங்கள் எடுத்த மதிப்பெண்ணும் அவர்கள் எடுத்தது போலவே வரும். ஆகவே  எங்களுக்கும் அவர்களுக்கு காட்டியது போன்றே சலுகை காட்டி வேலை தர வேண்டும் என்று 214 பேர் உயர் நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்துள்ளோம்

        உண்மையில, 27 கேள்விக்கும் மார்க் கொடுத்திருந்தால் 490 பேருக்கு வேலை கிடைத்திருக்கும். வேலை போனதால் 5 பேர் தற்கொலை செய்து கொண்டார்கள்.  சில பெண்களுக்கு வேலை இழப்பால் விவாகரத்தே ஆனது. ஆகவே, கோர்ட் கருணை காட்ட வேண்டும் என்பதே எங்களின் எதிர்பார்ப்பு’’ என்கிறார்,  வேதனையோடு!

No comments:

Post a Comment