ஆசிரியர் கவுன்சலிங் நடத்துவதில் தாமதம் ; கல்விப்பணி பாதிப்பு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, June 22, 2015

ஆசிரியர் கவுன்சலிங் நடத்துவதில் தாமதம் ; கல்விப்பணி பாதிப்பு

தமிழகத்தில் ஆண்டுதோறும் நடத்தப்படும் ஆசிரியர்களுக்கான பணிமாறுதல் கவுன்சலிங், கோடை விடுமுறையான, மே மாதத்தில் நடத்தப்பட்டு வந்தது.

இதனால், பள்ளி திறந்தவுடன், பணிமாறுதல் பெற்ற தலைமை ஆசிரியர்களும், ஆசிரியர்களும், ஜூன் முதல் தேதியிலேயே புதிய பணியிடத்தில் சேர்ந்து விடுவதால், கற்பித்தல் பணிகளில் பாதிப்பு இல்லாமல் இருந்து வந்தது.

இந்நிலையில், நடப்பு கல்வியாண்டுக்கான ஆசிரியர் மாறுதல், ஜூன் மாதத்தில் நடத்தப்படும் என, வாய்மொழியாக கூறப்பட்டு வந்தது. இதற்கிடையில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வந்ததால், கவுன்சலிங் மற்றும் பதவி உயர்வு கவுன்சலிங், மேலும் தள்ளிப்போகும் நிலை ஏற்பட்டுள்ளது. இடைத்தேர்தல் முடிந்தபின், ஜூலை மாதத்தில், கவுன்சலிங் நடத்தப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இதில், வேறு பள்ளிக்கு மாறுதல் வேண்டி காத்திருப்போர், பதவி உயர்வில், வேறு பள்ளிக்கு மாறுதல் பெற வேண்டிய சூழல் உள்ளவர்களில், பெரும்பாலானோர், எப்போது கவுன்சலிங் நடக்கும்; எப்போது வேறு பள்ளிக்கு செல்லலாம் என்ற எண்ணத்திலேயே பணிபுரிந்து வருகின்றனர்.

இதனால், இவர்கள் பள்ளி பணிகளில் ஆர்வம் காட்டவில்லை. அதிலும் மாறுதல் பெற விரும்பிய தலைமை ஆசிரியர்கள் இருந்த பள்ளிகளில், எந்த முடிவுகளையும் எடுக்க விரும்பாமல் தள்ளிப்போடுவதால், நிர்வாகம் ஸ்தம்பித்து கிடக்கிறது. இதனால், அப்பள்ளிகளில் கற்பித்தல் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து அரசுப்பள்ளி ஆசிரியர் ஒருவர் கூறியதாவது: மாறுதல் முடிவெடுத்த தலைமை ஆசிரியர்கள், கடந்த ஒரு மாதமாக எவ்வித முடிவும் எடுக்கவில்லை. உதாரணமாக பாடப்புத்தகம் பற்றாக்குறையாக இருப்பின், அதை அருகில் உள்ள பள்ளிகளிலோ அல்லது கல்வித்துறை அலுவலகத்திலோ பேசி, பெற்றுத்தருவது, சம்பளம் உள்ளிட்ட சலுகைகள் நிலுவையாக இருந்தால் பெற்றுத்தருவது உள்ளிட்டவற்றை கண்டுகொள்ளாமல் விட்டதுடன், மாணவர் சேர்க்கையிலும் அக்கறை காட்டவில்லை. மாறுதல் முடிவெடுத்த ஆசிரியர்கள் மற்றும் பதவி உயர்வில், மாறுதலுக்கு காத்திருக்கும் ஆசிரியர்களின் வகுப்பறையிலும், இதே நிலைதான் காணப்படுகிறது. இதனால், கடந்த ஒரு மாதம், பல பள்ளிகளில் மாணவர்களுக்கு வீணடிக்கப்பட்ட மாதமாகவே உள்ளது.

இதனால், பணிமாறுதல் கவுன்சலிங்கை விரைந்து நடத்துவதோடு, அடுத்த ஆண்டிலாவது, கோடை விடுமுறையிலேயே முடித்துவிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment