ஹெல்மெட் அணிவதால் ஏற்படும் பயன் குறித்து விழிப்புணர்வு பிரசாரம்: தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு யோசனை - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, September 23, 2015

ஹெல்மெட் அணிவதால் ஏற்படும் பயன் குறித்து விழிப்புணர்வு பிரசாரம்: தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு யோசனை

மோட்டார் வாகன விபத்து வழக்கை கடந்த ஜூன் மாதம் விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதி என்.கிருபாகரன், ‘தமிழகத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்கள் கண்டிப்பாக ‘ஹெல்மெட்’ அணியவேண்டும் என்று தமிழக அரசு அரசாணை பிறப்பிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்கள் ஹெல்மெட் அணியவேண்டும் என்ற உத்தரவை கடந்த ஜூலை 1-ந் தேதி முதல் தமிழக அரசு தீவிரமாக அமல்படுத்தி வருகிறது.

அதே நேரம், இதுதொடர்பான வழக்கு நீதிபதி என்.கிருபாகரன் முன்பு நிலுவையில் இருந்து வருகிறது. இந்த வழக்கு விசாரணைக்கு வரும்போது, ஹெல்மெட் உத்தரவு அமலுக்கு வந்த பின்னர், மாநிலத்தில் நடைபெறும் விபத்துக்கள் புள்ளிவிவரங்களை அறிக்கையாக அரசு தாக்கல் செய்து வருகிறது.

இந்த வழக்கு நீதிபதி என்.கிருபாகரன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது சிறப்பு அரசு பிளீடர் வேணுகோபால், ஒரு அறிக்கையை தாக்கல் செய்தார். அதில், ‘ஜூலை மாதம் நடந்த மோட்டார் சைக்கிள் விபத்தில் 498 பேர் இறந்துள்ளனர்.

இதில், 444 பேர் ஹெல்மெட் அணியவில்லை. ஆகஸ்டு மாதம் 571 பேர் பலியாகியுள்ளனர். இதில், 502 பேர் ஹெல்மெட் அணியவில்லை. செப்டம்பர் மாதம் 15-ந் தேதி வரை 289 பேர் பலியாகியுள்ளனர். இதில், 255 பேர் ஹெல்மெட் அணியவில்லை’ என்று கூறப்பட்டு இருந்தது.

இந்த அறிக்கையை படித்து பார்த்த நீதிபதி, ‘இந்த விபத்து புள்ளி விவரங்களை பார்க்கும்போது, ஹெல்மெட் உத்தரவை தமிழக அரசு தீவிரமாக அமல்படுத்தவில்லை என்று தெரிகிறது.

பெரு நகரங்களிலும், நகரங்களிலும் கட்டாய ஹெல்மெட் உத்தரவை தீவிரமாக அமல்படுத்தும் அதிகாரிகள், கிராமங்களில் இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை என்று தெரிகிறது’ என்று கருத்து தெரிவித்தார்.

மேலும், ‘கொல்கத்தாவில், வாகனம் ஓட்டுனர் உரிமம் வழங்கும்போது, வாகன விபத்துக்கள் எதனால் நடைபெறுகிறது? என்பது குறித்த வீடியோ காட்சியை போட்டு காட்டுகின்றனர். இதனால், புதிய உரிமம் வாங்குபவர்கள் மத்தியில் மோட்டார் வாகன விபத்துக்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுகிறது.

அதுபோல, தமிழகத்தில் ஏன் செய்யக்கூடாது? மேலும், சினிமா தியேட்டர், கோவில் ஆகிய இடங்களுக்கு செல்பவர்கள், வாகனத்தில் ஹெல்மெட் வைத்து பூட்டி பாதுகாப்பாக வைக்க இயலாததால், பலர் ஹெல்மெட் அணியாமல் செல்கின்றனர். எனவே, மோட்டார் சைக்கிள் தயாரிக்கும்போது, அதில் ஒரு பாகமாக ‘ஹெல்மெட் லாக்கரையும்’ சேர்த்து வடிவமைத்து மோட்டார் சைக்கிள்களை தயாரிக்கவேண்டும் என்று தனியார் நிறுவனங்களுக்கு, மத்திய அரசு உத்தரவிட வேண்டும்’ என்று நீதிபதி கருத்து தெரிவித்தார்.

இதன்பின்னர், அரசு வக்கீலை பார்த்து, ‘வாகனத்தை ஓட்டுபவர்களும், பின்னால் உட்கார்ந்திருப்பவர்களும் கண்டிப்பாக ஹெல்மெட் அணியவேண்டும் என்ற உத்தரவு உள்ளது. எனவே, புதிய மோட்டார் சைக்கிள் விற்பனை செய்யப்படும்போது, அந்த வாகனத்துடன் இரண்டு ஹெல்மெட்டுகளை வழங்க தனியார் நிறுவனங்கள் முன் வரவேண்டும். அதற்கும் அரசு தகுந்த உத்தரவினை பிறப்பிக்க வேண்டும்.

மேலும், சினிமா நடிகர்கள், நடிகைகள், அரசியல் கட்சி தலைவர்கள் ஆகியோரை கொண்டு ஹெல்மெட் அணிவதால் ஏற்படும் நன்மை குறித்து விழிப்புணர்வு பிரசாரம் ஏன் செய்யக்கூடாது? இவர்கள் விழிப்புணர்வு பிரசாரம் செய்தால், அது அனைத்து தரப்பு மக்களையும் சென்றடையும். இதுகுறித்து தமிழக அரசு ஆலோசனை செய்யவேண்டும்’ என்று கூறி நீதிபதி வழக்கு விசாரணையை வருகிற 30-ந் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment