சமையல் காஸ் வினியோகம் செய்யும் எண்ணெய் நிறுவனங்களின் கீழ் இயங்கும் ஏஜன்சிகள், அன்றாடம் ஒரு மணி நேரம் வாடிக்கையாளர்களின் குறைகளை கேட்டு நிவர்த்தி செய்ய வேண்டும். இதற்கான அறிவிப்புகளை வெளியிட வேண்டும்' என்று மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
நாடு முழுக்க இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் ஆயில் ஆகிய மூன்று நிறுவனங்கள், வீடுகளுக்கும், வர்த்தக நிறுவனங்களுக்கும் தேவையான சமையல் காஸ் சிலிண்டர்களை வினியோகம் செய்து வருகின்றன.
வீடுகளுக்கு மானியத்துடனும், வசதி உடையவர்களுக்கு மானியம் இல்லாமலும் சமையல் காஸ் சிலிண்டர்களை அவர்கள் தேவைக்குத் தகுந்தாற்போல், குறிப்பிட்ட கால இடைவெளிகளில் வினியோகித்து வருகின்றன.
சமையல் காஸ் வினியோகத்தில் ஏராளமான குளறுபடிகள் உள்ளன. இவற்றை களைவதற்கு, மாவட்ட வழங்கல் அலுவலர்கள் கண்காணிப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் மாதந்தோறும், எண்ணெய் நிறுவன அதிகாரிகளை அழைத்து சிறப்புக்கூட்டத்தை நடத்தி, அதன் வாயிலாக, வாடிக்கையாளர்களின், பல்வேறு பிரச்னைகளுக்கும், புகார்களுக்கும் தீர்வு காண்கின்றனர்.
இருப்பினும், வாடிக்கையாளர்களிடமிருந்து தொடர்ந்து வரும் புகார்களுக்கு வழங்கல் அலுவலர்களால் பதில் தெரிவிக்க முடிவதில்லை. அதற்குள் அந்த மாதம் நிறைவடைந்து விடுகிறது. திரும்பவும் அடுத்த மாத குறைதீர்ப்புக்கூட்டம் நடக்கும் நாள் வரை பொறுத்திருக்க வேண்டிய நிலை நீடிக்கிறது. இதனால், பிரச்னைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தீர்வு காண்பதற்கான கால அவகாசமும் அதிகரித்துள்ளது.
எண்ணெய் நிறுவன மண்டல மேலாளர்களிடம் தொடர்ந்து புகார்கள் சென்றன. இது குறித்து எண்ணெய் நிறுவன அதிகாரிகளுக்கான சிறப்புக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இதன் முடிவு மத்திய எண்ணெய் மற்றும் பெட்ரோலிய எரிவாயுத்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
பரிசீலனைக்குப்பின், தற்போது மத்திய எண்ணெய் மற்றும் பெட்ரோலிய அமைச்சகம் ஒரு உத்தரவை பிறப்பித்தது. அதில் ஒவ்வொரு எண்ணெய் நிறுவனத்தின் கீழ் இயங்கும் சமையல் எரிவாயு ஏஜன்சிகள் தங்களது அலுவலகத்தில் வாடிக்கையாளர்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில், ஒரு மணி நேரம் குறைதீர்ப்புக்கூட்டம் நடத்தப்பட வேண்டும். குறைகளையும், தீர்வுகளையும், வாடிக்கையாளர்களின் முகவரி, தொலைபேசி எண் ஆகியவற்றை பதிவு செய்து ஆவணமாக வைக்க உத்தரவிட்டுள்ளது.
இதை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும், இது போன்று குறைகேட்பது குறித்து வாடிக்கையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, ஆங்காங்கே அறிவிப்புகளை வைக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது.
எண்ணெய் நிறுவன அதிகாரிகள் கூறுகையில், 'ஒரு மணி நேரம் குறைகேட்க நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஏஜன்சி நடத்துவோரின் வசதிக்கு ஏற்றாற்போல் நேரத்தை ஒதுக்கிக் கொள்ள, நாங்கள் வாய்ப்பு வழங்கியிருக்கிறோம். இதை கண்காணிக்கும் பொறுப்பை எங்களுக்கும், மாவட்ட வழங்கல் அலுவலருக்கும் வழங்கியுள்ளனர். இதன் வாயிலாக வாடிக்கையாளர்களின் பிரச்னைகளுக்கு எளிதில் தீர்வு காண முடியும்' என்றனர்.
No comments:
Post a Comment