மாணவர்களை ஈர்க்கும் பொறியியல் படிப்பு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Sunday, June 26, 2016

மாணவர்களை ஈர்க்கும் பொறியியல் படிப்பு

பாடப்பிரிவை தேர்வுசெய்வது எப்படி?
பொறியியல் படிப்பு என்றவுடனே மாணவர்களுக்கு மட்டுமின்றி பெற்றோர் அனைவருக்கும் உடனே நினைவுக்கு வருவது இ.சி.இ (எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங்) என்ற 3 எழுத்துகள்தான். கடந்த சில ஆண்டுகளாக 2-வது இடத்தில் மெக்கானிக்கல்
இன்ஜினரியரிங் இருந்து வருகிறது.
ஒரு காலத்தில் ஐ.டி எனப்படும் இன்பர்மேசன்டெக்னாலஜி, கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவுகளுக்கு மாணவர்கள் மத்தியில் அமோக வரவேற்பு இருந்தது. ஆனால்,கடந்த சில ஆண்டுகளாக அந்த இடங்களை இசிஇ-யும், மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிப்பும் பிடித்துக்கொண்டன.
நம்மவர்களுக்கு எப்போதுமே ஒரு குணம். உண்டு. பக்கத்து வீட்டுக்காரன் ஒரு பொருளை வாங்கினால் அதை நாமும் எப்படியாவது வாங்கிவிட வேண்டும் என்று துடிப்பது. இது படிப்புக்கும் பொருந்தும். பக்கத்து வீட்டு மாணவரோ, உறவினரோ இன்ஜினியரிங்கில் குறிப்பிட்ட ஒரு பாடத்தில் சேர்ந்திருப்பார். அவரைப் பார்த்துக்கொண்டு அப்படியே சேர்ந்து விடுவது நமது மாணவர்களின் இயல்பாக மாறியிருக்கிறது. உண்மையில் நமது திறமை என்ன? நமது ஆர்வம் என்ன? என்பதையெல்லாம் ஆராய்ந்து பார்க்க மாணவர்கள் தவறிவிடுகிறார்கள்.
மாணவர்கள் மத்தியில் அமோக வரவேற்பு இருக்கும் குறிப்பிட்ட சில பாடப்பிரிவுகளை படித்து முடிக்கும்அனைவருக்குமே கேம்பஸ் இண்டர்வியூ தேர்வில் வேலை கிடைத்து விடுவதில்லை. பொறியியலில் எந்த பாடப்பிரிவை எடுத்துப் படித்தாலும் அதை சிறந்த முறையில் முடிக்கும் மாணவர்களுக்கே உடனடியாக வேலை கிடைக்கிறது என்பதுதான் நிதர்சனமான உண்மை.
என்ன பாடப்பிரிவில் பொறியியல் பட்டம் பெற்றிருக்கிறோம்? என்பதைக்காட்டிலும் அந்த பாடப்பிரிவை எப்படி படித்து முடித்திருருக்கிறோம்? என்பதுதான் முக்கியம். வெறும் படிப்பு மட்டுமின்றி வேலைக்குத் தேவையான தகுதிகளை வளர்த்திருக்கிறோமா? என்பதுதான் வேலைவாய்ப்பை உறுதி செய்கிறதே தவிர படித்த பட்டம் மட்டுமே அல்ல என்பதை மாணவர்கள் உணர வேண்டும்.
எனவே, பொறியியல் சேரும் மாணவர்கள் தங்களுக்கு எந்தத் துறை மீது ஆர்வம் இருக்கிறது? அத்துறையில் சாதிப்பதற்கு தேவையான திறமை நம்மிடம் உள்ளதா?, ஒருவேளை அத்திறமை இல்லாவிட்டால் அதை வளர்த்துக்கொள்ள முடியுமா்? பி.இ. அல்லது பி.டெக்.. முடித்துவிட்டு சாப்ட்வேர் துறையில் நுழைய போகிறோமா? எலெக்ட்ரானிக்ஸ் சார்ந்த துறைகளில் சேரப்போகிறோமா? அல்லது மின்சார உற்பத்தி, வாகனங்கள், ஆட்டோமொபைல் சாதனங்கள் தயாரிப்பு என உற்பத்தி சார்ந்த துறைகளில் நுழையப் போகிறோமோ? என்பதையெல்லாம் இப்போதே தீர யோசித்து ஒரு முடிவுக்கு வந்துவிட வேண்டும்.
அம்மா, அப்பா சொல்கிறார்கள்,. நண்பர்கள் வற்புறுத்துகிறார்கள், உறவினர்கள் யோசனைசொல்கிறார்கள் என்று சொல்லி உங்களுக்கு விருப்பமில்லாத அல்லது கடினமாக இருக்கும் என்று நீங்கள் மனதில் நினைக்கிற ஒரு பாடப்பிரிவை தயவுசெய்து தேர்வு செய்துவிடாதீர்கள். காரணம் பின்னர் கஷ்டப்படப்போவது நீங்கள்தானே தவிர, பெற்றோரோ, உற்றார் உறவினரோ, நண்பர்களோ அல்ல.
மாணவ, மாணவிகளே, உங்களின் ஆர்வமும், திறமையும் நீங்கள் சேர விரும்பும் பாடப்பிரிவை தீர்மானிக்கட்டும். மற்ற காரணிகளுக்கு ஒருபோதும் இடம் கொடுத்து விடாதீர்கள். பிடித்தான பாடப்பிரிவில் சேரும்போது, நல்ல ஆர்வத்துடன் படித்து நல்லமதிப்பெண்களுடன், தேவையான திறமைகளுடன் பொறியியல் பட்டதாரியாக வெளியே வரலாம். கேம்பஸ் இண்டர்வியூ தேர்வில் வேலையும் தேடி வரும். பிடித்தமான கல்லூரியில், பிடித்த மான பாடப்பிரிவில் சேர்ந்து சிறந்த முறையில் பொறியியல் படித்து முடித்து நல்ல பணியில் சேரலாம்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் சிறப்பு ஏற்பாடுகள்
பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வினை தமிழக அரசு சார்பில் அண்ணா பல்கலைக்கழகம் கடந்த 19 ஆண்டுகளாக வெற்றிகரமாக நடத்தி வருகிறது. கலந்தாய்வில் கலந்துகொள்ள வரும் வெளியூர் மாணவர்கள், உடன் வரும் பெற்றோருக்காக தேவையான அடிப்படை வசதிகள் கலந்தாய்வு நடைபெறும் அண்ணா பல்கலைக்கழகத்தில் செய்யப்பட்டுள்ளன. ஓய்வுக்கூடம், குளிக்கும் வசதி, குடிநீர் வசதி, கேண்டீன் வசதி என அனைத்து வசதிகளும் தயாராக உள்ளன.
கலந்தாய்வுக்கு வரும் மாணவருக்கும் துணைக்கு வரும் ஒரு நபருக்கும் அரசு பஸ்களில் 50 சதவீத கட்டணச்சலுகை உண்டு. இந்த சலுகையைப் பெறுவதற்கு கலந்தாய்வு அழைப்புக் கடிதத்தின் ஒரிஜினலை நடத்துனரிடம் காண்பிக்க வேண்டும். இந்த ஆண்டு சிறப்பு அம்சமாக கலந்தாய்வுக்கு தாய் அல்லது சகோதரியுடன் வரும் மாணவிகளுக்கு முந்தைய நாள் இரவு தங்கிக்கொள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் விடுதி வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
பொறியியல் கல்லூரி தரவரிசை முறையில் மாற்றம் வருமா?
பொறியியல் கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த ஆண்டுக்கான தரவரிசைப் பட்டியல் அண்மையில் வெளியிடப்பட்டது. மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அடிப்படையாகக் கொண்ட இந்த தரவரிசைப் பட்டியலுக்கு குறிப்பிட்ட ஒரு செமஸ்டரில் உள்ள தேர்ச்சி விகிதமே பார்க்கப்படுகிறதே ஒழிய ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம் கணக்கில்கொள்ளப்படுவது இல்லை.
இவ்வாறு ஒரு செமஸ்டர் தேர்ச்சி விகிதத்தை அடிப்படையாகக் கொண்டு வெளியிடப்படும் தரவரிசைப் பட்டியல் கல்லூரியின் உண்மை தேர்ச்சி நிலையை பிரதிபலிக்காது என்று பொறியியல் கல்லூரி நிர்வாகிகள் கருதுகிறார்கள்.
இவ்வாறு இல்லாமல் குறிப்பிட்ட கல்வி ஆண்டில் எத்தனை மாணவர்கள் சேர்ந்தார்கள், 4 ஆண்டுகளுக்குப் பிறகு அவர்களில் எத்தனை பேர் பட்டம் பெற்று வெளியே வருகிறார்கள் என்பதை அடிப்படையாக வைத்து தரவரிசைப் பட்டியலை வெளியிட வேண்டும் என்று தனியார் பொறியியல் கல்லூரி நிர்வாகிகள் யோசனை தெரிவித்தனர்.

No comments:

Post a Comment