இந்திய பங்கு சந்தை முதலீட்டாளர்களுக்கு ரூ.7 லட்சம் கோடி'அவுட்!'( நாம் பாடு பட்ட சேர்த்த CPS பணம் என்னவாகும்??? இதுதான் பங்குச்சந்தையில் உள்ள ஆபத்து) - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, August 3, 2017

இந்திய பங்கு சந்தை முதலீட்டாளர்களுக்கு ரூ.7 லட்சம் கோடி'அவுட்!'( நாம் பாடு பட்ட சேர்த்த CPS பணம் என்னவாகும்??? இதுதான் பங்குச்சந்தையில் உள்ள ஆபத்து)


இந்திய பங்கு சந்தை முதலீட்டாளர்களுக்கு ரூ.7 லட்சம் கோடி'அவுட்!'( நாம் பாடு பட்ட சேர்த்த CPS பணம் என்னவாகும்??? இதுதான் பங்குச்சந்தையில் உள்ள ஆபத்து)
சீனாவின் பொருளாதார மந்தநிலை, அமெரிக்காவில் வட்டி உயரும் சூழல் போன்ற காரணங்களால், நேற்று, இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளின் பங்குச் சந்தைகள், வரலாறு காணாத சரிவைச் சந்தித்தன.பங்குச் சந்தை பட்டியலில் இடம்பெற்றுள்ள நிறுவனங்களின் பங்குகள் விலை 
சரிவடைந்ததால், முதலீட்டாளர்களுக்கு, 7 லட்சம் கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக, மதிப்பிடப்பட்டுள்ளது.

நேற்று, மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், 'சென்செக்ஸ்', வர்த்தகத்தின் இடையே 1,741.35 புள்ளிகளை இழந்தது. இது, கடந்த ஏழு ஆண்டுகளில் ஏற்பட்ட, மூன்றாவது மிகப் பெரிய சரிவு. இதற்கு முன், 2008, ஜன., 22ம் தேதி, பங்கு வர்த்தகத்தின் இடையே சென்செக்ஸ், 2,272.93 புள்ளிகளும்; 21ம் தேதி வர்த்தகத்தின் இடையே 2,062.20 புள்ளிகளும் குறைந்திருந்தன. தேசிய பங்குச் சந்தையின், 'நிப்டி' குறியீட்டு எண், வர்த்தகத்தின் இடையே 530.55 புள்ளிகள் வரை சரிவடைந்தது. எனினும், பங்கு வர்த்தகத்தின் இறுதியில், லேசான முன்னேற்றம் ஏற்பட்டதால், சென்செக்ஸ், 1,624.51 புள்ளிகள் குறைந்து, 26,741.56 ஆகவும்; நிப்டி, 490.95 புள்ளிகள் சரிவடைந்து, 7,809 என்ற அளவிலும் நிலைபெற்றன.
நேற்று, ஒரே நாளில், மும்பை பங்குச் சந்தையின் மதிப்பு, 100 லட்சம் கோடிக்கும் கீழாகக் குறைந்து, 95,33,105 கோடி ரூபாயாக வீழ்ச்சி கண்டது. பங்குச் சந்தை பட்டியலில், முதல், 10 இடங்களில் உள்ள, டி.சி.எஸ்., ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட, 10 நிறுவனப் பங்குகளின் சந்தை மதிப்பு, 2 லட்சம் கோடி ரூபாய் வரை குறைந்தது.
இந்த வீழ்ச்சிக்கு, சீன பொருளாதாரத்தின் சரிவு தான் காரணம். இது குறித்து, தனியார் நிறுவனம் ஒன்று, ரகசியமாக ஆய்வு நடத்தியது. அதில், சீனாவின் பொருளாதாரம் மிகவும் மோசமான நிலையில் உள்ளதும், அதன் தொழில் துறை உற்பத்தி, இதுவரை இல்லாத வகையில் மிகவும் சரிவடைந்துள்ள விவரமும் தெரிய வந்தது. இந்த ஆய்வறிக்கை, கடந்த, வெள்ளியன்று வெளியானது. இதனால், அச்சமடைந்த சீன பங்கு முதலீட்டாளர்கள், சனி, ஞாயிறு விடுமுறைக்குப் பின், நேற்று பங்குச் சந்தை செயல்படத் துவங்கியதும், மளமளவென பங்குகளை விற்று விட்டு வெளியேறினர். இதனால், சீனாவின் ஷாங்காய் பங்குச் சந்தையின், எஸ்.சி.ஐ., குறியீட்டு எண், கடந்த, எட்டு ஆண்டுகளில் இல்லாத அவிற்கு, 9 சதவீதம் வரை சரிவடைந்தது.அதே சமயம், இந்த சரிவை தடுத்து நிறுத்த, கடந்த காலத்தில் எடுத்தது போன்ற எந்த நடவடிக்கையையும், சீன அரசு எடுக்கவில்லை. ஏனெனில், அண்மையில் தான், தன் நாட்டின் கரன்சியான, 'யுவான்' மதிப்பை சீனா குறைத்திருந்தது. அதனால், செயற்கையான பணப்புழக்கம் மூலம் சந்தையை தாங்கிப் பிடித்தால், அது, பொருளாதாரத்தை கடுமையாக பாதிக்கும் என்ற அச்சம் காரணமாக, சீன அரசு, நேற்றைய வீழ்ச்சியை வேடிக்கை பார்த்தது.இதன் எதிரொலியாகத் தான், ஆசிய, ஐரோப்பிய நாடுகளின் பங்குச் சந்தைகளும் சரிவடைந்தன. இந்த சரிவிற்கு, மற்றொரு காரணமும் உள்ளது.
கடந்த வாரம் நடைபெற்ற, அமெரிக்க மத்திய வங்கியின் நிதி ஆய்வுக் கூட்டத்தில், வட்டி விகிதங்களை உயர்த்த ஆதரவு தெரிவிக்கப்பட்டது. இதனால், 14 ஆண்டுகளுக்குப் பின், அமெரிக்க வங்கிகளின் வட்டி விகிதம் உயரும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதை எதிர்பார்த்து, அங்கு முதலீடு செய்யும் நோக்கில், அன்னிய நிதி நிறுவனங்கள், மும்பை பங்குச் சந்தையில், அதிக அளவில் பங்குகளை விற்பனை செய்தன.கடந்த, 2013 துவக்கத்தில், சென்செக்ஸ், 17,903 புள்ளிகளாக இருந்தது.அதே ஆண்டு செப்டம்பரில், ரிசர்வ் வங்கி கவர்னராக ரகுராம் ராஜன் பொறுப்பேற்றதும், 2014ல், மோடி தலைமையில், மத்திய அரசு அமைந்ததும், பங்குச் சந்தைக்கு வலு சேர்த்தது. இதையடுத்து, ஒரே ஆண்டில், சென்செக்ஸ், 60 சதவீதம் வரை உயர்ந்து, 30 ஆயிரம் புள்ளிகளை எட்டியது.
சீன பங்குச் சந்தைக்கு அடுத்தபடியாக, இந்திய பங்குச் சந்தை முதலீடு, 31 சதவீதத்திற்கும் அதிகமான வருவாயை ஈட்டித் தந்தது. இந்நிலையில் தான் நேற்று, மும்பை பங்குச் சந்தை கடும் சரிவை சந்தித்தது.
இழப்பு எப்படி?
ஒரு நிறுவனப் பங்கை, 100 ரூபாய்க்கு வாங்கி, அதன் விலை 80 ரூபாயாகக் குறையும் போது, 20 ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. அந்த பங்கை விற்றால் தான், இழப்பு ஏற்படுமே தவிர, அதை நீண்ட கால முதலீடாக வைத்திருந்தால், அது, இழப்பு கணக்கில் சேராது.சுருக்கமாகக் கூறினால், பங்கை வாங்கி, விற்கும் வர்த்தகர்கள் மட்டுமே இழப்பை சந்திப்பர். முதலீடு அடிப்படையில், இதை உடனடி இழப்பாகக் கருத முடியாது.

கச்சா எண்ணெய்:
நேற்று, சர்வதேச முன்பேரச் சந்தையில், ஒரு பீப்பாய் 'பிரென்ட்' கச்சா எண்ணெய் விலை, வர்த்தகத்தின் இடையே, 44.24 டாலராக வீழ்ச்சி கண்டது. இது, கடந்த, ஆறரை ஆண்டுகளில் காணப்படாத சரிவு. இதற்கு முன், 2009ம் ஆண்டு மார்ச் மாதம், இந்த நிலை காணப்பட்டது. அமெரிக்காவின், டபிள்யு.டி.ஐ., கச்சா எண்ணெய் விலை, வர்த்தகத்தின் இடையே, 39 டாலராக சரிவடைந்தது.கச்சா எண்ணெய் விலை சரிவால் கிடைக்கும் பயனை முழுமையாகப் பெற முடியாதவாறு, ரூபாய் மதிப்பின் சரிவு தடுத்துள்ளது. எனினும், பெட்ரோல், டீசல் விலை, குறிப்பிடத்தக்க அளவிற்கு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரூபாய் மதிப்பு வீழ்ச்சி:
அன்னியச் செலாவணி சந்தையில், இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, நேற்று, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு, வர்த்தகத்தின் இடையே, 66.72 ஆக சரிவடைந்தது. இது, 2013ம் ஆண்டு, செப்., 5ம் தேதிக்குப் பின், காணப்பட்ட நிலை. கடந்த,10 நாட்களில், டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு, மூன்று ரூபாய்க்கும் அதிகமாக வீழ்ச்சி கண்டுள்ளது.யுவான் மதிப்பு குறைக்கப்பட்ட பின், கடந்த, இரு வாரங்களில், ரூபாய் மதிப்பு, 4 சதவீதத்திற்கும் அதிகமாக சரிவடைந்துள்ளது. ரூபாய் மதிப்பு குறைவால், இறக்குமதி செலவு அதிகரிக்கும்; அதே சமயம், ஏற்றுமதியை சார்ந்துள்ள, ஐ.டி., நிறுவனங்கள் பயன் அடையும்.

அச்சம்:
* இரண்டு வாரங்களுக்கு முன், சீனாவின் யுவான் கரன்சி மதிப்பு, 3.5 சதவீதம் குறைக்கப்பட்டது. ஏற்றுமதியை ஊக்குவிக்க, சீனா எடுத்த இந்த நடவடிக்கையால், இதர நாடுகளின் ஏற்றுமதி பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. அந்நாடுகளும், கரன்சி மதிப்பை குறைக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இது, ஒட்டுமொத்த பொருளாதார தேக்கத்திற்கு வழிவகுக்கும் என்ற அச்சம், முதலீட்டாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
* உலகின் இரண்டாவது பெரிய பொருளாதார நாடான சீனா, ஆட்டம் காணத் துவங்கியுள்ளதால், அதன் உண்மையான பொருளாதார மதிப்பு குறித்த சந்தேகம் எழுந்துள்ளது. இதனால், இழப்பை தவிர்க்க, சீனா மற்றும் இந்தியா உள்ளிட்ட வளர்ந்து வரும் நாடுகளில் இருந்து, முதலீட்டாளர்கள், தங்கள் முதலீடுகளை திரும்பப் பெற்று, தங்கம் உள்ளிட்ட பாதுகாப்பான இனங்களில் முதலீடு செய்யத் துவங்கியுள்ளனர்.


வலுவாக உள்ளது: நம் பரந்துபட்ட பொருளாதார காரணிகள், கட்டுக்குள் உள்ளன என்று, நிதிச் சந்தைகளுக்கு மீண்டும் உறுதி கூறுகிறேன். பல நாடுகளின் பொருளாதாரத்தை ஒப்பிடும் போது, இந்திய பொருளாதாரம், நல்ல நிலையில் உள்ளது. இந்தியாவிடம், 25 லட்சம் கோடி ரூபாய் அன்னியச் செலாவணி கையிருப்பு உள்ளது. தேவைப்படும் போது, இது பயன்படுத்தப்படும். அரசின் சீரிய, உணவு மேலாண்மை திட்டங்கள், விளைபொருட்கள் விலை சரிவு ஆகியவை, ரிசர்வ் வங்கி, வட்டி விகிதங்களை குறைக்க துணை புரியும். எனினும், தற்காலிக நிலவரத்தின் அடிப்படையில், வட்டி விகிதங்களை குறைப்பது சரியாக இருக்காது. அடுத்த, 1 - 2 ஆண்டுகள் வரை, கச்சா எண்ணெய் விலை, குறைவாகவே இருக்கும். நீண்ட காலமாகவே, கரன்சி சந்தையில் அவ்வப்போது சரிவு நிகழ்ந்து வருகிறது. இறுதியாக, இதற்கு, சீனா வழிவகுத்துள்ளது.ரூபாய் வெளிமதிப்பின் ஏற்ற, இறக்கத்தை சமாளிக்கும் திறன் ரிசர்வ் வங்கிக்கு உள்ளது. டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு குறைந்துள்ளது. அதேசமயம், சீனாவின் யுவான் மற்றும் ஐரோப்பாவின் யூரோவிற்கு நிகரான ரூபாய் மதிப்பு உயர்ந்துள்ளது.
- ரகுராம் ராஜன்,
ரிசர்வ் வங்கி கவர்னர்
இந்திய பங்குச் சந்தை நிலவரத்தை, மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் உன்னிப்பாக கவனித்து வருகின்றன. சீனா, யுவான் மதிப்பை குறைத்ததால் ஏற்பட்டுள்ள இந்த சரிவில் இருந்து, சந்தை மீண்டு, நிலைக்கு வரும். சர்வதேச பங்குச் சந்தைகளின் சரிவால் ஏற்பட்டுள்ள தற்போதைய வீழ்ச்சி, நிலையற்றது.
- அருண் ஜெட்லி,
மத்திய நிதி அமைச்சர்

No comments:

Post a Comment