சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் எச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை தீவிரம் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, September 22, 2015

சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் எச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை தீவிரம்

தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை கடந்த சில மாதங்களுக்கு முன்பு எடுக்கப்பட்டது. இதனால் டெங்கு காய்ச்சல் கட்டுப்பாட்டில் உள்ளது. பொது சுகாதாரத்துறை மூலம் டெங்கு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.பள்ளி, கல்லூரி, மாணவர்கள் மத்தியிலும், பொது இடங்களிலும் கொசு உற்பத்தியை தடுப்பது குறித்து துண்டு பிரசுரங்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் மூலம் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.இந்த நிலையில் சென்னையை அடுத்த ஆவடியில் டெங்கு காய்ச்சலுக்கு பள்ளி மாணவர் ரூபேஷ் (வயது 15) பலியானார். கடந்த சில நாட்களாக கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ரூபேஷ் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு உயிர் இழந்தார்.ரூபேசின் தங்கை மதுமிதாவிற்கும் (13) டெங்கு காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரது பெற்றொர் மற்றும் உறவினர்கள் அருகில் வசிப்பவர்களுக்கும் டெங்கு பாதிப்பு ஏற்படாமல் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.அந்த பகுதி முழுவதும் கொசு மருந்துகள் தெளிக்கப்பட்டுள்ளன. அப்பகுதி மக்கள் தீவிர சுகாதார கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.சென்னையில் பள்ளி மாணவர் டெங்கு காய்ச்சலுக்கு பலியானதை தொடர்ந்து 4 மாவட்டங்களில் டெங்கு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர் ஆகிய 4 மாவட்டங்களில் சுகாதாரப்பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.இது குறித்து தமிழக பொது சுகாதார இயக்குனர் டாக்டர் குழந்தைசாமி கூறியதாவது:–தமிழகம் முழுவதும் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, சென்னை காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர் மாவட்டங்களில் டெங்கு பரவுவதற்கு வாய்ப்புகள் உள்ளன.மழை பெய்து வருவதாலும் டெங்கு பாதித்த டெல்லிக்கு சென்று வருபவர்களின் எண்ணிக்கை அதிகளவில் இந்த மாவட்டங்களில் இருப்பதாலும் எச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி இருக்கிறோம்.சென்னையில் மாநகராட்சி மற்றும் பொது சுகாதாரத் துறையும் இணைந்து தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.பள்ளி, கல்லூரிகள், பெரிய காம்பவுண்டுகள், மைதானங்களை தூய்மைப்படுத்தி கொசு உற்பத்தியை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளபட்டுள்ளது.இதற்காக 8 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழுவினர் பள்ளி, கல்லூரி, தொழிற்சாலைகளுக்கு சென்று அங்குள்ள ஊழியர்களுக்கு காலி இடங்களை பராமரிப்பது குறித்து பயிற்சி அளித்து வருகிறது.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. கிண்டி, தொழிற்பேட்டை, ராணுவ பயிற்சி முகாம், விமானப்படை பயிற்சி முகாம் போன்றவற்றில் இந்த தடுப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன்இந்த குழுவில் பொது சுகாதார அலுவலர், மருத்துவர், சுகாதார ஆய்வாளர், சுகாதார நலக்கல்வி அலுவலர் உள்ளிட்டவர்கள் இடம் பெற்றுள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment