சோப்பு, ஷாம்பூவினால் கருச்சிதைவு அபாயம்! ஆய்வில் தகவல் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Friday, September 4, 2015

சோப்பு, ஷாம்பூவினால் கருச்சிதைவு அபாயம்! ஆய்வில் தகவல்

நாம் அன்றாடம் பயன்படுத்தும் சோப்பு, ஷாம்பூ போன்ற அழகு சாதனப் பொருள்கள், உணவுப் பொருள்கள் ஆகியவற்றை அடைத்து வைப்பதற்கு பயன்படுத்தப்படும் பொருள்களால் கர்ப்பிணிப் பெண்களுக்கு கருச்சிதைவு ஏற்படும் அபாயம் இருப்பதாக அண்மையில் சீனாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.
அந்த நாட்டின் பீக்கிங் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஜியான்யிங், ஹுவான் ஷென் ஆகிய இரு ஆய்வாளர்கள் தலைமையிலான குழு 300-க்கும் மேற்பட்ட பெண்களிடம் ஆய்வு நடத்தியது.
கருச்சிதைவுக்கு ஆளான 132 பெண்கள், ஆரோக்கியமான 172 கர்ப்பிணிப் பெண்கள் ஆகியோரது சிறுநீர் மாதிரிகளை அந்தக் குழு பரிசோதித்தது.
அந்தப் பரிசோதனையில், கருச்சிதைவுக்கு ஆளான பெண்களின் சிறுநீரில் "தேலேட்டுகள்' எனப்படும் வகையிலான ரசயானப் படிமங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அன்றாடம் பயன்படுத்தப்படும் சோப்பு, ஷாம்பூ, உணவுப் பொருள்களை அடைத்து வைப்பதற்காக பொதுவாகப் பயன்படுத்தப்படும் "பாக்கெட்டு'களில் இந்த வகையிலான ரசாயனப் பொருள்கள் உள்ளன.
எனவே, அழகு சாதனப் பொருள்களைப் பயன்படுத்தியதன் மூலமும், அடைத்து வைக்கப்பட்ட உணவுப் பொருள்களை உட்கொண்டதன் மூலமுமே "தேலேட்' ரசாயனப் பொருள்கள் பெண்களின் உடலுக்குள் கலந்திருப்பதாகக் கண்டறியப்பட்டது.
தொழிற்சாலைச் சூழல் அல்லாது, சாதாரண வீட்டுச் சூழலில் கூட, அன்றாடம் பயன்படுத்தும் பொருள்கள் மூலம் கருச்சிதைவை ஏற்படுத்தக்கூடிய ரசாயனப் பொருள்களை பெண்கள் உட்கொள்ளும் அபாயம் இருப்பது இந்தச் சோதனையின் மூலம்தான் முதல்முறையாகத் தெரியவந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அமெரிக்காவிலிருந்து வெளிவரும் சுற்றுச்சூழல் அறிவியல் ஆய்வு இதழில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.

No comments:

Post a Comment