பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள பணத் தட்டுப்பாடு இம்மாத இறுதிக்குள் நீங்கும் என
மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி உறுதியாக நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பணப் புழக்கம் குறித்து அவர் வெள்ளிக்கிழமை கூறும்போது, "நவம்பர் 8-ம் தேதி முன் வரை நாட்டில் புழக்கத்தில் இருந்து ரூபாய் நோட்டுகளின் அளவில் புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகள் இருக்காது. அதற்கு மாற்றான வகையில் புதிய ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடப்படும். இதனால் டிசம்பர் 30-ம் தேதிக்குள் பணத் தட்டுப்பாட்டு பிரச்சினை நீங்கி இயல்பு நிலை திரும்பும்.
கடந்த 70 ஆண்டுகளாக நாட்டின் பொருளாதாரத்தை கறுப்புப் பணம் பாழாக்கி வந்தது. அதை முறியடிக்கவே பண மதிப்பு நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த நடவடிக்கையால் அரசியல் நிதி ஆதாரங்கள் அனைத்தும் இனி வெளிப்படையாக நடக்கும்" என்றார் அவர்.
முன்னதாக, கறுப்புப் பணம் மற்றும் ஊழலை ஒழிப்பதற்காக பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை கடந்த 8-ம் தேதி மத்திய அரசு திரும்ப பெற்றது. இதன் காரணமாக வங்கிகள், ஏடிஎம்கள் முடங்கின. பணப் பரிவர்த்தனை பாதிக்கப்பட்டதால் நாடு முழுவதும் பணத்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது.
அதற்கு மாற்றாக புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டாலும், போதிய அளவுக்கு விநியோகிக்கப்படாத காரணத்தினால், வங்கிகள் முன்பாக நிற்கும் பொதுமக்களின் கூட்டம் இதுவரை குறையவில்லை என்பது கவனிக்கத்தக்கது
No comments:
Post a Comment