பச்சரிசி, சர்க்கரை, கரும்பு, ரூ.100 ரொக்கம்: தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு அறிவிப்பு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, January 6, 2016

பச்சரிசி, சர்க்கரை, கரும்பு, ரூ.100 ரொக்கம்: தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு அறிவிப்பு

குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, இரண்டு அடி நீளக் கரும்புத் துண்டு மற்றும் 100 ரூபாய் ரொக்கம் ஆகியவை அடங்கிய சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், "உலகத் தமிழர் அனைவராலும் கொண்டாடப்படும் திருவிழா தமிழர் திருநாள் எனப்படும் பொங்கல் பண்டிகை ஆகும். பொங்கல் திருநாளான அறுவடைத் திருநாள் உழவருக்கு நன்றி செலுத்தும் திருநாள் ஆகும். இறைவனுக்கும், இயற்கைக்கும், உழவருக்கும், உழவருக்கு உறுதுணையாக இருக்கும் கால்நடைகளுக்கும் நன்றி நவில்கின்ற நாள் பொங்கல் திருநாள். பொங்கல் திருநாள் அறுவடைத் திருநாளாக உள்ளதால், தமிழர் கலாச்சாரத்தில் இந்த நாள் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை தமிழக மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில், அரிசி குடும்ப அட்டை உடைய குடும்ப அட்டைதாரர்கள், காவலர் குடும்ப அட்டை பெற்றுள்ள காவலர் குடும்பங்கள் மற்றும் முகாம்களில் தங்கியுள்ள இலங்கைத் தமிழர் குடும்பங்கள் ஆகியோருக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, இரண்டு அடி நீளக் கரும்புத் துண்டு மற்றும் 100 ரூபாய் ரொக்கம் ஆகியவை அடங்கிய சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் பொங்கல் பரிசுத் தொகுப்பு பொங்கல் திருநாளுக்கு முன்னரே சம்பந்தப்பட்ட நியாய விலைக் கடைகள் மூலம் வழங்கப்படும். இதன் மூலம் அரசுக்கு 318 கோடி ரூபாய் செலவு ஏற்படும்.

அரசின் இந்த நடவடிக்கையின் மூலம் 1 கோடியே 91 லட்சம் குடும்பங்கள் பயன் பெறுவர். ஏழை, எளிய, சாமானிய மக்கள் பொங்கல் பண்டிகையை சீரோடும், சிறப்போடும் கொண்டாட இது வழி வகுக்கும்"

இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment